Saturday, July 28, 2007

மறுகரையில் யாழ்ப்பாணம்.


முதலில் அவனுக்கு ஏழாம் திருவிழாவாக தங்களின் திருவிழா வந்ததில் பெரிய கவலை இருந்தது. உபயகாரர் என்ற பெயருக்குள் அப்பாவின் பெயரும் வர திருவிழா தொடங்கியத்தில் இருந்து ஏழு நாட்கள் காத்திருக்க வேண்டி இருந்ததுதான் இதற்கு காரணம். பிறகுதான் ஏழாம் திருவிழாவை எடுத்தில் அப்பாவிற்கும், கந்தசாமி மாமாவுக்கு, கெங்காதரன் அப்பாப்பாவுக்கும் இருந்த புத்திசாலிதானத்தை நினைத்து அடிக்கடி வியந்து கொள்வான்.

முதலாம் திருவிழாவிற்கும் இராண்டாம் திருவிழாவிற்கும் இடையிலேயே எவ்வளவோ பெரிய வித்தியாசம் வரும் போது, முதலாம் திருவிழாவிற்கும் ஏழாம் திருவிழாவிற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தமால் அப்பாவும், கந்தசாமி மாமாவும், கெங்காதரன் அப்பாப்பாவும் ஓய்வதில்லை. முதலில் ஒவ்வொரு நாட்களுக்கிடையே இருக்கும் சூட்சுமத்தை அவனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. சாமி கோவிலை சுற்றி அவனின் வீட்டுக்கு முன்னால் வரும் போது நிறைகுடம் வைப்பதற்கான ஒழுங்கை அப்பாம்மாவுடன் சேர்ந்து செய்தால் சரியாக இருந்தது. பிறகு தங்கச்சி வளர்ந்து நிறைகுடம் வைக்கும் வேலையை எடுத்துக்கொண்ட பிறகுதான் அவன் சாமிக்கு பின்னால் வரத்தொடங்கினான். சாமி தூக்குவதென்றால் சும்மாவா..? அந்த திருவிழா உபயகாரர்களின் வளர்;ந்த மூத்த மகன்மார் தங்களின் கட்டுமஸ்தான உடம்பில் தங்கசங்கிலி புரள புரள வேர்த்து வடிய வடிய தூக்குவினம். எந்த கடும் வெயிலுக்குள்ளும் அவர்களது உடல் சோர்ந்து விடாது என்பதை ஊர் இளம் பெண்களுக்கு காட்டும் சுயம்வரமாக அது இருந்தது. அவனும் ஒரு சங்கிலி போட்டு இருந்தான். அம்மா திருவிழா தொடங்கின உடனயே அவனுக்கு ஒரு சிங்கப்பூர் முறுக்கு சங்கிலியும், அண்ணாவுக்கு கைச்செயினும் போட்டு விட்டாள்.

முதலாம் திருவிழா என்றால் அனேகமாக இரண்டு கூட்டு மேளம் தான் இருக்கும். பிறகு நாலாம் திருவிழா, ஐந்தாம் திருவிழாவிற்கெல்லாம் ஆறுகூட்டு, ஏழு கூட்டு மேளம் பிடிக்க வெளிக்கிட்டுவினம். எத்தனை கூட்டு மேளம், வேறு வேறு கலைநிகழ்ச்சி, சின்னமணி வாத்தியாரின் வில்லுப்பாட்டு, கம்பன் கழக ஜெயராஜின் சொற்பொழிவு என தங்களின் பலத்தை காட்ட உபயகாரர்கள் தங்களாலான சகல முயற்சிகளையும் செய்வினம். மேளகாரர்களை அனேகமாக தூர இடங்களில் இருந்துதான் பிடிச்சு வருவினம். முதல் நாளே வந்து உபயகாரர் ஏற்பாடு பண்ணின வீட்டில் மேளக்காரர்கள் இருக்க, உபயகாரர்களில் ஒருவர் இரவிரவாய் அவர்களுக்கு சாராயம் வாங்கவும், ஆட்டிறைச்சி வாங்கவும் ஓடுப்பட்டு திரிவார். நிறை வெறியில் ஒரு மேளகாரர் வேட்டி அவிழ அவிழ, கோவில் மடம் மட்டும் வந்ததை அவன் கண்டிருக்கிறான்.

மேளகாரர் வாசிக்க தொடங்கினவுடன் உபயகாரர்கள் தங்களுக்கு தெரிஞ்ச பாட்டுகளை ஒரு துண்டில் எழுதி தங்களின் கடைசி மகன்மாரை மேளகாரருக்கு பக்கத்தில் இருந்தி, விடுவினம். அவன்கள் சொல்லச் சொல்ல மேளக்காரர் அந்த பாட்டை வாசிப்பினம். பிறகு இளம்பெடியள் வட்டம் வடக்கு மூலையில் வைச்சு "ஸ்டைலு ஸ்டைலு தான்" பாட்டையோ "அந்த அரபிக்கடலோரத்தையோ" வாசிக்க சொல்ல, அவர்களும் நாதஸ்வரத்தினால் எச்சில் வடிய வடிய வாசிப்பார்கள். அவனுக்கு அதை பார்க்க பார்க்க பொல்லாத கோபம் வரும். ஆனால் அதையெல்லாம் ஈடுகட்ட கந்தசாமி மாமா திட்டம் போட்டிருவார். ஒரு முறை ஆறாம் திருவிழா முடியப்போகுது. விடிந்தால் ஏழாம் திருவிழா. ஒரு மேளகாரர் கூட வரவில்லை. அவனுக்கோ பெரிய வெட்கமாய் இருந்தது. கந்தசாமி மாமாவையும் காணேல்லை.

விடிஞ்சு போச்சு. திருவிழா தொடங்க போகுது. திடீரென்று ஒரு மொறிஸ் மைனர் கார் ஒன்று வந்து நின்றது. அப்பாவும் , கெங்காதரன் அப்பாப்பாவும் ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சபடி காரை நோக்கி போச்சினம். காரில் இருந்து ஒருவர் இறங்கினார். உயரமான கொஞ்சம் ஒல்லியான, ஒருவர். நிறைய சங்கிலிகள் போட்டிருந்தார். வெறும் மேலில் ஒரு வெள்ளை சால்வை போட்டு மூடி இருந்தார். அவனும் ஓடிப்போய் அப்பாவுக்கு பக்கத்தில் நின்றான். காரில் இருந்து வந்தவரின் உதவியாளர்களும் இறங்கிச்சினம். அவர் வந்து நாதஸ்வரம் வாசிக்க தொடங்கிய அழகை எல்லாத்திருவிழாக்காரும் கூடி நின்று பார்த்தினம். அவரின் நாதஸ்வரத்திற்கு கீழ நீளத்திற்கு பல பதக்கங்கள் கொழுவி இருந்தது. அதில் நாதஸ்வரம் மாதிரியே ஒரு பதக்கம் தங்கநிறத்தில் மின்னியது இன்னமும் ஞாபகம் இருக்கு.
கடைசியாய் அவர் போவதற்கிடையில் அவரின் பெயர் பஞ்சாபிகேசன் என்று அப்பாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு தான் அவன் மற்ற உபயகாரர்களின் பெடியளை தேடினான். அவங்கள் எல்லாம் வெட்கத்தில் ஓடி ஒளிஞ்சிட்டாங்கள்.

எந்த வருட திருவிழாவிலும் ஏழாம் திருவிழா தான் வெல்லவதாய் இருந்தது. கம்பன் கழக ஜெயராஜ் வந்தார். வில்லுப்பாட்டு சிவமணி வாத்தியார் இப்படி இப்படி எல்லாம் புதுமையையும் ஏழாம் திருவிழாக்காரரே செய்தனார். ஆனால் கனமூர்த்தியும் பஞ்சமூர்த்தியும் தான் பெரிய தவில் நாதஸ்வரக்காரர்கள் என்று யாரோ சொன்னார். அவர்களின் கச்சேரியை பார்க்க அவன் தச்சன்தோப்பு பிள்ளையார் கோவில் வரை போக வேண்டி இருந்தது. அங்கும் கனமூர்த்தி வரவில்லை அவரது மகன் தட்சாணமூர்த்திதான் வந்திருந்தார். அவன் கந்தசாமி மாமாவை கனமூர்த்தி பஞ்சமூர்த்தியை தங்களின் திருவிழாவுக்கு கூப்பிட வேண்டுமென்று கெஞ்சினான். அவர்தான் இந்த முறை தச்சன்தோப்புக்காரங்கள் கூப்பிட படியால் அடுத்தவருடம் கூப்பிடுவம் என்றார். அதற்கு பதிலா அந்த திருவிழாவை ஒரு கலக்கு கலக்க கந்தசாமி மாமா முடிவெடுத்தார். அப்பா, கந்தசாமி மாமா, ராஜன் மாமா, கெங்காதரன் அப்பாப்பா என்று எல்லாரும் கூடி கன நேரமாய் ஏதோ கதைத்தனர். பிறகு ராஜன் மாமாவும், கந்தசாமி மாமாவும் அவரின் சாளி மோட்டார் சைக்கிளில் எங்கோ வெளிக்கிட்டு போச்சினம்.

பிறகு அடுத்த நாள் கந்தசாமி மாமா சிரித்த முகத்துடன் வந்தார். வரும் போதே கை நிறைய நோட்டிசும் கொண்டே வந்தார். அது கன கலர்களில் இருந்தது. நோட்டிசில் வசனம் இப்படி இருந்தது.

வருடா வருட உங்கள் முன் பல நிகழ்ச்சிகளை மேடையேற்றி வந்த ஏழாம் திருவிழா உபயகாரர்கள் இந்த வருடம் ஈழத்தின் புகழ்பெற்ற இசைக்குழுவினரான ஈழநல்லூர் அருணா இசைக்குழுவினரை உங்கள் முன் அழைத்து வருகின்றனார்.

பிறகென்ன ஏழாம் திருவிழா பெடியங்களுக்கு சந்தோசம் பொங்கி வழிந்தது. நோட்டிசை இரவு பகல் பார்க்கமால் எல்லா சுவரிலும் ஒட்டினார்கள். அவனின் வீடு றோட்டு கரையோரம் இருந்ததால் கூட்டம் கூட்டமாய் ஆக்கள் போகும் போது பலகணியில் இருந்தும் நோட்டிசுகளை தூவினான். அவனுக்கு முதல் இபபடி நோட்டிசை உயரத்தில் இருந்து வீசும் உத்தியை செய்தது என்றால் அது இரண்டு மூன்று கெலிகாப்டர் தான். அந்த நோட்சுகள் இரண்டு நிறத்தில் இருந்தன. ஒன்று சிவப்பில். மற்றது நிறமெதுவும் இல்லாமல் வெள்ளையாய். அந்த நோட்டிசை அடிச்சு பிடிச்சு வயல்வெளியெல்லாம் ஓடிப் பொறுக்கினதும் அதில் இருந்த வசனமும் நல்ல ஞாபகம் இருக்கு. அந்த நோட்டிசில் வசனம் இப்படி இருந்தது.

"பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த பிரபாகரனின் தலைக்கு 10 லட்சம் சன்மானம்" என்று இருந்தது.

நல்ல வேளை கந்தசாமி மாமா அந்த நோட்டிசை பார்க்கேல்ல போல இருக்கு. இல்லையேன்றால் அருணா இசைக்குழுவை பார்க்க வருபவர்களுக்கு தலைக்கு 10 ரூபா தருவதாக நோட்டிசு அடித்து விட்டிருப்பார்.

ஏழாம் திருவிழா முடிந்து இரவாகி விட்டது. அருணா இசைக்குழுவை பார்க்க ஆட்கள் எல்லாம் பக்கத்து ஊர் ஆட்கள் எல்லாம் வந்து குவியத் தொடங்கினார். யாரோ ஓடி வந்து கந்தசாமி மாமாவிடம் நளச்சனமெல்லாம் வந்திருப்பதாகவும் இசைக்குழு வரவிட்டால் பெரிய அவமானமாக போகும் என்றும் புறுபுறுத்து கொண்டு நின்றனார். கந்தசாமி மாமா குட்டி போட்ட பூனை போல கோவிலுக்கு பின்னால் சுற்றுவதும் றோட்டை பார்ப்பதுமாக நின்றார். முதல் திருவிழாகாரர் போடப்பட்ட மேடைக்கு முன்னால் நின்று விசில் அடிக்க வெளிக்கிட்டார்கள். அவனுக்கும் வெட்கமாய் இருந்ததால் ஓடி வந்து வீட்டில் நின்று கோவிலடியை பார்த்துக்கொண்டு நின்றான். கடைசியாய் இரவு பன்னிரண்டு மணியாகப் போற நேரத்தில் ஒருவர் மோட்டார் சைக்கில் வந்து கந்தசாமி மாமாவிடம் ஆமி யாழ்ப்பாணத்தை நோக்கி வருதாகவும் ஆனதால் அருணா இசைக்குழு வர முடியாமால் இடம்பெயர்வதாகவும் சொல்லி விட்டு போனார். பிறகு அப்பா, கந்தசாமி மாமா, கெங்காதரன் அப்பாப்பா எல்லாம் மளமளவென்று வீட்டுக்கு வந்துவிட்டனர். இசைக்குழு நடக்காது என்று அறிவிக்க சொல்லி துவாரகப்பெரியப்பாவிடம் சொல்ல அவரும் ரூபாவாகினி வி. என். மதியழகனை தோற்கடிக்கும் நோக்கோடு அறிவிப்பு செய்ய, கூடியிருந்த கூட்டம் பெரும் விசிலடிப்போடு கலைந்து போனது.

அதுதான் ஊரில் அவன் இருந்த கடைசி திருவிழா. திருவிழா மேளச்சத்தங்கள் ஓயு முன்பே யாழ்ப்பாணத்தில் இருந்து குண்டு சத்தங்கள் பெரிது பெரிது கேட்க தொடங்கியது. ஏராளமான எறிகணை தலைக்கு மேலால் போய் கொண்டிருந்தது. ஓரிரண்டு அருகில் வீழ்ந்து வெடித்தது. வல்லிபுர வாத்தியார் வீட்டுக் கிணற்றடியில் எறிகணை வீழந்து துலா முறிந்து றோட்டில் கிடந்தது. அதனால் அவர் ரியூசன் கொடுப்பதை நிறுத்தி கொண்டார். அன்றிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்கள் வெளிக்கிட்டு கிளாலியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆட்கள் இல்லா வீடுகளில் இயக்கம் வந்து இருக்க தொடங்கியது. மீகுதி வீடுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் வலிகாமத்திலும் இருந்து வந்தவர்கள் இருக்க தொடங்கினார்கள். அவர்களிடம் எப்படி இடம்பெயர்ந்து வந்தார்கள்? என்பதை இருக்கும் ஊர்காரர்கள் கேட்டறிவதை ஒரு பகுதி நேர தொழிலாக செய்து வந்தார்கள். அவர்களும் அந்த கதைகளை சொல்லி முடிப்பதற்குள் சத்தம் ஊரையும் நெருங்கி விட்டது.

அவனின் வீட்டை இயக்கம் காயமடைந்த போராளிகளிற்கு சிகிச்சை அளிக்கும் இடமாக மாற்றியது. அப்பாம்மாதான் அந்த வீட்டிற்குள் நளப்பெடியங்களையும் , பெட்டைகளையும் கொண்டு வருதாக சொல்லிக்கொண்டு இருந்தா. இயக்க வாகனங்கள் அடிக்கடி வீட்டிற்கு முன்னால் நிற்பதால் பொம்பர் வீட்டில் மேல குண்டு போடப்போகுது என்றும் கவலைப்பட்டா.

போஸ்ட் மாஸ்ரர் வீட்டில் இருந்த பெண் போராளிகள் குழுவை சேர்ந்தவர்களில் ஒருத்தி அவனுக்கு பழக்கமானாள். இவனுக்கு மாமா வாங்கித் தந்த முத்திரை அல்பத்தினை அவளுக்கு காட்டினான். அவள் அடுத்த நாள் கொஞ்ச முத்திரைகளையும் , ஒரு கண்ணாடிப்போத்தலுக்குள் பழசரமும் கொண்டு வந்து கொடுத்து விட்டு யாழ்ப்பாண சண்டைக்கு போறம். பேப்பரை பாருங்கோ வீரச்சாவு என்று படம் வரும் என்று சொல்லி விட்டு சென்றாள். அப்பாம்மா அந்த பழரசத்தை குடிக்க கூடாது என்றும் உவங்கள் துப்பரவில்லமால் செய்து இருப்பங்கள் என்றும் சொன்னா.

வீட்டுக்கு நாளாந்தம் வரும் காயமடைந்த போராளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சத்தமும் ஊரை நெருங்கியது. சாமி தூக்கின பெடியளில் கொஞ்சமும், அருணா இசைக்குழு பார்க்க வந்த நளபெடியளும் இயக்கத்திற்கு போனார்கள். எஞ்சிய சாமி தூக்கியவர்கள் வெளிநாட்டுக்கு போனார்கள். கம்பன் கழக ஜெயராஜ் கொழும்பில் சொற்பொழிவு ஆற்ற தொடங்கியிருந்தார், ராஜன் மாமா கொழும்புக்கு இடம்மாற்றம் எடுக்க அலுவல் பார்ப்பதாக சொன்னார். கந்தசாமி மாமாவிற்கோ என்ன நடந்தது என்று அவனுக்கு யாரும் சொல்லவில்லை. கோவியில் பூசை வைக்க கூட ஐயர் இல்லை.

மூத்த மாமா வந்து அவனைக் கூட்டிக்கொண்டு போனார். கிளாலி கரையெல்லாம் சனத்தால் நிரப்பி வழிந்தது. நடுக்கடலில் கெலிகாப்டர் தாழப்பதிந்து சூட்டுக்கொண்டிப்பதை அடிக்கடி பார்க்க கூடியதாக இருந்தது. மூன்றாவது நாள் ஒரு படகில் ஏறி போகும் போது, கரையெல்லாம் யாழ்ப்பாணத்தார் கட்டிக்காத்த பொருட்களெல்லாம் சிதறிக்கிடந்தது. சன கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கரையிலேயே போட்டு வள்ளம் கிடைத்தால் போதுமென்றிருந்தனர். கடலில் பயணப்பொதிகளும், உடைகளும் இன்ன பிற பொருட்களும் மிதந்தன. மறுகரையில் வந்து இறங்கிய போது தட்சணாமூர்த்தியும், பஞ்சமூர்த்தியும் வந்த போட்டை கெலி சூட்டதாகவும் பஞ்சமூர்த்தியின் தவில் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதாகவும் யாரோ சொன்னார்கள். அது உண்மையோ பொய்யோ என்று தெரியாது. ஆனால் அவன் கிளாலி இக்கரையை விட்டு கடக்கும் வரை அக்கரையில் இருகூட்டு மேளம் வாசித்து கேட்டது. டும் டும் பீப்பி

2 comments:

தமிழ்நதி said...

நாங்களெல்லாம் ஊரை நீங்கி வந்த காலத்தை மிக இயல்பாக ஆர்ப்பாட்டமில்லாமல் பதிவு செய்திருக்கிறீர்கள். திருவிழாவை முன்னிறுத்தி, அதனை மையப்புள்ளியாக வைத்து கதையை நகர்த்திய விதம் அருமையாக இருக்கிறது. எனக்கு அ.இரவியின் ஞாபகமும் வந்தது. அவரும் இப்படித்தான்... கச்சான்கார ஆச்சிமார்,தும்புமிட்டாய்,காப்புக்கடை என்று திருவிழாவை அப்படிப் பதிவு செய்திருப்பார். இந்தப் பதிவை வாசிக்கும்போது வேதனையாக இருந்தது நிலவன். நாம் எப்படிப் பெயர்த்தெறியப்பட்டோம் என்று நினைக்க... புலம்ப ஆசையாக இருக்கிறது. ஆனால், எவ்வளவுக்கென்றுதான் புலம்புவது?

நிலவன் said...

நன்றி தமிழ்நதி அக்கா,
உங்களின் பாராட்டு எனக்கு பெரிய புளுகத்தை தந்தது. அடிக்கடி இப்படி வரும் ஊர் நினைவுகளை கதையில் எழுதத்தோன்றுகையில் எல்லாப்பிரதிகளும் ஒரு மாதிரியாக வந்துவிடுமோ என்ற பயம் வேறு. நாளும் பதிவிட்டும் பதிவுக்கு பதிவு வித்தியாசம் காட்டும் பதிவர்களிடையே இந்த கதை எம்மாத்திரம் என்பது எனக்கு தெரிந்தாலும்..உங்களின் பாராட்டே அடுத்த பதிவுக்குரிய உற்சாகத்தை தரும்