Tuesday, October 17, 2006

அழைத்தது ஆவியா?

யாழ்ப்பாணம் - இது ஈழத்தின் வரைபடத்தின் தலை போன்று இருக்கும், தமிழர்களின் கலாச்சார தலைநகரம் என்று அழைக்கப்படும் பல் ஆயிரம் ஆண்டு பரம்பாரியம் கொண்ட நகர். ஈழத்தின் ஏனைய நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்ல ஆனையிறவு என்ற இடத்தில் 50 மீற்றர் ஒடுக்கமான பாதை மாத்திரமே இருந்தது. ஏனைய பிரதேசங்கள் கடல் நீரேரியால் நிறைந்திருந்தது. அந்த குறுகலான 50 மீற்றர் பாதை தொடங்கும் இடமே. ஆனையிறவு என அழைக்கப்பட்டிருந்தது. அந்த குறுகலான பாதையில் ஏறததுதாழ 300 வருட காலமாக ஆங்கிலேய போலிசும், சிறிலங்கா பொலிசும் சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபடுவோரை பிடிக்கவென நின்றிருந்தனர். அதன் பின் போராளிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் போர் தொடங்கிய பின்னர் இலங்கை இராணுவம் வந்து அங்கு முகாமிட்டது. சின்ன வயசில் அப்பம்மாவை பார்க்க ஊர் போகும் போது ஆனையிறவில் எல்லோரையும் சோதனை பண்ணுவார்கள். நான் பஸ்சை வீட்டு இறங்குவதில்லை. அப்பாவும் , அம்மாவும் தான் இறங்கி போவினம். பஸ்சில் இருந்து இருந்து பார்த்தால் இருகரையும் உப்பு “மால்”கள் சம்பல் நிற மலைகள் போல காட்சியளிக்கும். அதிகாலையில் கலையாத பனிப்புகரும் , உப்புமால்களும் என்னுடைய சின்ன வயசில் ஆனையிறவை ஒரு மலை பிரதேசம் போன்றே எண்ணத்தோன்றியது.
(Elepant pass என இருப்பது தான் ஆனையிறவு)
1990களின் ஆரம்பத்தில் ஆண்டு பிறகு ஆனையிறவில் இருந்த இலங்கை இராணுவம் முன்னேறி வந்து அருகிருந்த பரந்தன் என்னும் நகரை கைப்பற்றியது. பிறகு சிறிது காலத்தில் திரும்பி போய் ஆனையிறவில் இருந்து கொண்டனர். அந்த இடைவெளியில் ஆனையிறவு மிகப்பெரிய இராணுவ முகாம் ஆயிற்று. நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் இராணுவ வாகனங்களும் அங்கு குவிக்கப்பட்டது.

அதற்கு பிறகு நாங்கள் அப்பம்மாவை பார்க்க ஆனையிறவால் போக முடியாதிருந்தது. அதற்கு பிறகு ஆனையிறவில் இருந்து வலப்பக்கமாக இருந்த கடல் நீரேரியான கொம்படி – ஊரியான் என்னும் இடத்திற்கு ஊடாகத்தான் யாழ்ப்பாணம் போனம். எங்களை எல்லாம் ஒரு படகில் வைத்து ஒருவர் தள்ளிக்கொண்டு மறுகரையில் விடுவார். அவர் எப்போது இடுப்பளவு தண்ணீரிலும் சில வேளை அதை விட கூட தண்ணீருள்ளாலும்தான் வந்தார். சில இடங்களில் தண்ணீருக்குள் இருக்கும் மண் புட்டிகளில் முட்டி நின்று விடும். அவர் உடன பொறுத்திட்டு ஆம்பிளைகள் இறங்கி தள்ளுங்கோ என்பார். பிறகு அதில் இருக்கும் ஆம்பிளைகள் இறங்கி தள்ளி அந்த படகு அந்த புட்டியை கடக்க வைப்பார்கள். அந்த இடத்தின் பயணங்கள் எல்லாம் இரவில் மாத்திரம் தான் இருந்தது. ஏனெனில் பகல்களில் பயணம் செய்தோரை இலங்கை அரசின் கெலிகள் தாழப்பறந்து சூட்டுக்கொண்டதாக சொல்வார்கள். எங்களின் வீட்டுக்கருகே கடை வைத்திருந்த ஐங்கரன் ஸ்ரோஸ் கணபதிப்பிள்ளை அண்ணை அதில் தான் காயப்பட்டராம். அவரின் ஒரு காலின் கீழ்ப்பகுதியில் தசைகள் இல்லாது எலும்பை தோலால் போர்த்து போன்றுதான் இருந்தது. பிறகு கொஞ்ச நாளில் அந்த ஊரியன் கொம்படி பாதையாலும் போவதை நிற்பாட்டிச்சு. ஏனென்றும் நான் யாரிடம் கேட்கவில்லை. ஆனால் அதை ஆமி பிடித்திருந்தாக இப்போது கேள்விப்படுகின்றேன்.

அதற்கு பிறகு ஆனையிறவுக்கு இடப்பக்கமாக இருந்த கிளாலியை யாழ்ப்பாணம் போக பாவிச்சம். அங்கு யாரும் படகை தள்ளிக்கொண்டு போக தேவையில்லை. இரண்டு எஞ்சின் அந்த படகில் கொழுகி இருக்கும். ஒன்றுதான் ஓட்டி இயக்குவார். மற்றது அனேகமாய் சும்மா இருக்கும். ஏனென்று அப்பாவிடம் கேட்டால் ஒரு இஞ்சின் பழுத போனால் அடுத்த இஞ்சினில் போகலாம் என்றும், நேவி துரத்தினால் இரண்டு இஞ்சினையும் இயக்கி வேகமாய் போகலாம் என்றார். ஆனால் கடவுளே என்று நான் போகும் போது ஒரு நாளும் இஞ்சினும் நிற்கவும் , நேவியும் துரத்தவில்லை. ஆனால் நாளாந்தம் கிளாலியின் கரைகளில் பிணங்கள் ஒதுங்கியபடி இருந்தது. இருந்தும் யாரும் பயணத்தை நிறுத்தவில்லை. சும்மாவா யாழ்ப்பாணத்தில் இருந்த 5 லட்சம் மக்களுக்கு சாப்பாடு, அவர்களின் உறவுகள் எல்லாம் கொண்டு போகும் பாதையாக கிளாலி இருந்த படியால் கிளாலியின் இரு கரையும் திருவிழா போலத்தான் இருக்கும்.

கிளாலியின் இருகரைகளில் இறங்கியவுடன் எங்களை ஏற்றி செல்ல டக்ரர்களே காத்திருந்தன. நடுஇரவில் கரையிறங்கும் நாங்கள் அந்த ட்க்ரர்களில் இரவோடு இரவாக போவம். அந்த டக்ரர் எங்களை கொண்டு போய் ஒரு சிறு நகர் பிரதேசத்தில் விட்டால் அங்கிருந்து நாங்கள் எங்களின் இடத்திற்கு பஸ் பிடிக்க வேண்டியதுதான். மேடும் பள்ளமான அந்த ட்க்ரர் பாதைகளை போல பாதைகளில் நான் இதுவரைக்கும் வேறு எங்கும் பயணிக்கவில்லை. உடம்பின் பகுதிகள் புண்ணாகும் அளவிற்கு ட்க்ரர் குலுங்கி குலுங்கி செல்லும். அதற்குள்ளும் நான் என்னை கூட்டிப்போன அப்பாவின் மடியிலோ, மூத்த மாமாவின் மடியிலோ, நித்தி மாமாவின் மடியிலோ தூங்கிப்போவேன்.
(கிளாலிக்கு மேலாலும் கெலிதான்)

இப்படிப்பட்ட இந்த கிளாலியால் நான் ஏறந்தாழ 5 முறை போய் வந்திருக்கின்றேன். ஒரு முறை மூத்த மாமாவுடனும் , இன்னுமொரு முறை பிரகாஸ் அண்ணாவுடனும் வந்த பயணங்களின் ஞாபகங்கள் இப்போதும் உண்டு. கிளாலியில் பல படகுப்பாதைகள் இருந்தன. உதாரணமாக வியாபாரத்திற்கெனவும், மக்களின் போக்குவரத்துக்கு எனவும் கரையிலேயே சிறு சிறு தூர வித்தியாசத்தில் இருந்து படகுகள் அங்கும் அதற்குரிய இடங்களுக்கு போய் சேர்ந்தன. இவ்வாறான படகுப்பாதைகளை ரூட் (Root) என்பார்கள். வியாபார படகுப்பாதையாக இருந்தால் வியாபார ரூட் என்று அழைத்தார்கள். மக்களின் போக்குவரத்து பாதையை சன ரூட் எனவும் போராளிகளின் போக்குவரத்து பாதையை இயக்க ரூட் எனவும் அழைத்தனர்.

ஒரு முறை மூத்த மாமா யாழ்ப்பாணத்திற்கு ஒரு தொகை வியாபார பொருட்களை கொண்டு புறப்பட்டனர். அவருடன் சேர்ந்து என்னையும் அனுப்பி விட்டனர். நாங்கள் வியாபார ரூட்டில் பொருட்களை ஏற்றிய படி புறப்பட்டோம். அங்கு ஏறந்தாழ இருபந்தைந்து சிறிய படகுகளில் பொருட்களை ஏற்றி ஒன்றுடன் ஒன்றை தொடுத்து கட்டி முன்னுக்கு சற்று பெரிய போட் அவற்றை இழுத்து போகும். ஏனெனில் எரிபொருள் பிரச்சனைக்காக. நாங்கள் எல்லாம் அந்த பெரிய போட்டில் இருந்து சின்ன போட்டுகளை பார்த்த படி இருப்பம். வியாபார ரூட்டில் போனால் திரும்பி வரும் போது அவர் இந்த வியாபார ரூட்டில் வரலாம் காசு தேவையில்லை. மற்றது சன ரூட் போல சன நெரிசல் இல்லை. எனவே திரும்பி போகும் போது வியாபார ரூட்டால் போக நானும் மூத்த மாமாவும் வந்தம்.

ஆனால் எங்களின் துரதிஸ்டம் அன்று இங்கிருந்து படகு எதுவும் புறப்படவில்லை. எனவே அன்றிரவை கடற்கரையிலே கழிக்க வேண்டியதாயிற்று. இரண்டு பனையோலைகளை நிலத்திற்கு போட்டுக்கொண்டு கடற்காற்றை சமாளிக்க இரண்டு பனையோலைகளை மணலில் குத்தி விட்டுக்கொண்டு படுத்துக்கொண்டாலும் காற்றுக்கு இரண்டு ஓலைகளும் மோதி மோதி சத்தம் எழும்பியும், கடுமையான குளிர்காற்றும் என் நித்திரையை விழுங்கிக்கொண்டது. விடிந்தால் இயற்கை உபாதையை தீர்க்க சின்ன ஒரு ஈச்சம்பற்றையே இருந்தது. அந்த பற்றையையே அந்த கரையிருந்த பலர் பாவித்தனர். நான் அதற்குள் போவதாய் இருந்தால் கெந்திக்கோடு விளையாடுபவார்கள் போலவே செல்ல வேண்டி இருந்தது. எனவே அடக்கிக்கொண்டு வீட்டுக்கு போய்த்தான் அது எல்லாம் என்று தீர்மானித்துக்கொண்டேன். அந்த கடற்கரையில் ஒரேஒரு கடைதான் இருந்தது. அங்கு சாப்பாட்டுக்கென “கல்பணிஸ்” (கோதுமை மாவினால் செய்யப்பட்டு, மேலே சிறிது சீனி தூவி வெதுப்பப்பட்டிருக்கும்) மாத்திரமே இருந்தது. மூத்தமாமாவிற்கு எனக்கு தொடர்ச்சியாக கல்பணிஸ் வாங்கித் தர ஏதோ மாதிரி இருந்திருக்கும். அதனால் அவர் எனக்கு நிறைய காசு தந்து இந்தா நீ வேண்டியதை வாங்கி சாப்பிடு என்றார். அங்கோ கல்பணிஸை தவிர வேறு இல்லை. இப்படியே படகை பார்த்து பார்த்து மூன்று நாட்கள் கிளாலியின் கரையில் கல்பணிசுடன் பனையோலையில் கிடந்தோம். எனது ஈச்சம்பற்றை சபதத்தை மூன்று நாட்களுக்கு கட்டிக்காக்க முடியாது போனதால் கெந்தி கோடு விளையாடிய படியே அதற்குள் போய் காலைக்கடன் கழித்து விட்டு வந்தேன்.மூன்று நாட்களுக்கு பிறகு யாரோ ஒருவர் புகையிலையை வன்னிக்கு கொண்டு செல்ல வந்ததினால் அவரது படகிலேயே வந்து சேர்ந்தோம்.

இதன் பிறகு ஒரு முறை பிரகாஸ் அண்ணாவுடன் சன ரூட்டால் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தோம். வரும் போது பிரகாஸ் சைக்கிளும் கொண்டு வந்திருந்தார். எனவே இந்த கரையில் இறங்கி ட்க்ரரில் ஏறமால் சைக்கிளில் பயணமாகினோம். நாங்கள் பரந்தனை நெருங்கும் போதும் நள்ளிரவு கடந்திருந்தது. ஆனாலும் நிலவொளி இருந்தது. பரந்தன் நகர் உடைந்து சின்ன பின்னமாகி இருந்தது. ஒரு மக்கள் குடியிருப்புக்களும் அங்கு இல்லை. நானும் பயத்துடன் சைக்கிளில் இருக்கிறேன். யாருமில்லா அத்தெருவில் நாங்கள் பயணம் போகின்றோம். தீடிரென ஒரு சத்தம். ஏதோ விழுந்தது போல..அத்துடன் யாரோ கூப்பிட்டது போலவும். பிரகாஸ் அண்ணா சட்டென்று சைக்கிளை திருப்பி சத்தம் வந்த இடத்தில் நிறுத்தினால்..அங்கு நாங்கள் கொண்டு வந்திருந்திருந்த பை ஒன்று விழுந்திருந்தது. அதுதான் அந்த விழுந்த சத்தத்திற்கு காரணம். அப்படியானால் கூப்பிட்டது யார். நான் அந்த பையை எடுக்க இறங்கினேன். பாதையின் கரையாக சத்தம் வந்த திசையாக பார்த்தேன். அந்த நிலவொளியில் ஒரு உருவம் நின்றது தெரிந்தது. திகைத்து போய் , உடல் குளிர வடிவாய் பார்த்தேன். அருகில் நொறுங்கியிருந்த இருந்த தேவாலயத்தில் இருந்து உடைந்து போன மாதா சிலை தனியாக சிறு சிறு உடைசலுடன் அங்கு இருந்தது. யார் கொண்டு வந்து வைத்தார்களோ, அல்லது குண்டு வெடிக்கும் போது தனியாக வந்து விழுந்ததோ..அக்கம்பக்கம் பார்த்தும் ஒருவரும் இல்லை. பிறகு வீடு வந்து சேர்ந்ததும் அம்மாவிடம் முதல் கதையையாக இதை சொன்னேன். அம்மா சொன்னா “ஏமம் சாமத்தில இப்படி வெளிக்கிட்ட யாரும் கூப்பிட்டு கேட்கும் தானே” என்று.