Wednesday, July 25, 2007

கொலை தொடங்கும் நாள்.


திடீரென்று ஒரு நாள் அனைவரையும்
சுற்றியும் வட்டங்கள் வளர்ந்தன.
அவை அவர்களை சுற்றியும், அவர்கள்
தலையின் பின்னாலும் வேறு இருந்தன.

வட்டங்களை அவர்கள்தான் முதலில்
வளர்த்தார்கள்.
பிறகொருநாள் அவை தானாகவே வளர ஆரம்பித்தன.
என்னவோ போங்கள்,
பின்னர் அவை சிறிதெனவும் பெரியதெனவும்
ஒன்றன் பின் ஒன்றாக பூமியின் தரையெங்கும் படர்ந்தன.
அவற்றை அவர்கள் எவரும் வட்டங்கள்
என ஏற்றுக்கொள்ளவில்லை.
சிலர் அதை சதுரம் என்றனர்.
சிலர் அதை முக்கோணம் என்றனர்.
சிலர் அதை அடி முடியறியா சிவனின் உருவம் என்றனர்.

என் காலடிகளுக்கிடையே தோன்றும் அசூயை
ஒன்றின் பொழுதுதான் நான்
வட்டங்கள் இடைவெட்டும் தொடை ஒன்றில் நிற்கக்
கண்டேன்.
அவற்றில் இருந்து என்னை விடுத்து
வர நான் ஓடிய போதும் அவற்றின்
ஓரங்களை கூட என்னால் தாண்ட முடியவில்லை.

அவரவர் வட்டங்கள் பெருத்து என்னை
சுற்றிச் சுற்றி வந்த போது
விளக்கமறியா ஒரு புதிர் கணக்கு
என் உயிர் திருகக்
கண்டேன்.

நான் வட்டங்களை விடுத்து
வெளியே வர அவற்றை கொலை செய்ய
தீர்மானித்த பொழுதொன்றில்,
என்னை மையமென கொண்டு புறப்பட்ட வட்டம் பலரின் வட்டங்களை இடை
வெட்டுவதை கண்டேன்.

26.07.2007
அதிகாலை 5.08

No comments: