Wednesday, October 25, 2006

கண்ணம்மா சொன்ன கதைகள்

ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு உணவகத்தில் அவரை கண்டேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்களும் பிறகு அவரை சந்தித்தேன். ஒரு நாள் யாழ்ப்பாணம் போகும் பேருந்தில் வைத்து, அந்த சனநெரிசலுக்கு மத்தியிலும் தன் பையில் இருந்த தனது நூலான “கண்ணம்மா” வை தந்தார். அவரது பெயர் தி.உதயசூரியன். பாடசாலை ஒன்றில் தமிழ் ஆசிரியராக கடமையாற்றுகின்றார். தற்போது கண்ணம்மா பாகம் இரண்டை வெளியிடுவதற்கான வேலைகளில் ஈடுபடுவதாக கூறினார்.

அவரின் கண்ணம்மா என்னும் முதலாவது தொகுப்பில் கண்ணம்மா என்னும் ஒரு பாடசாலை மாணவி வன்னியில் யுத்த சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அற்புதமாக எழுதி இருந்தார். ஆனால் அந்த நூலின் முன்னுரையை வாசிக்கமாலே இவற்றை கவிதைகள் என கொள்ள முடியுமா என் யோசித்த போது, முன்னுரையில் யோகரத்தினம் செகதீசுவரி யோகி அவர்கள் இப்படி எழுதி இருந்தார்.

“இதில் வரும் கவிதைகளை கவிதைகள் என ஏற்க என்னால் முடியவில்லை. கவிதைகள் குறைந்தது ஓசை நயத்தையாவது கொண்டிருக்க வேண்டுமென்பது எனது தாழ்மையான கருத்து. காசி ஆனந்தன் அவர்கள் இவற்றை நறுக்குகள் என அழைக்கலாம். என்பார். இருந்த போதும் நடைமுறையில் இவை கவிதைகள் என்றே அழைக்கப்படுவதைக் கருத்திற் கொண்டு இவை பற்றிப் பேசுகையில் கவிதைகள் என்றே குறிப்பிடுகின்றேன்”
ஆனால் உண்மையில் இவை கவிதையா? சிறுகதையா? என்றெல்லாம் யோசிப்பதை விட, யுத்த சூழலுக்குள் வாழும் வன்னிப்பாடசாலை சிறுமி

எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்து எழுதியுள்ளார்.

கண்ணம்மாவின் குழந்தையாக வரும் அந்த சிறுமி பட்டினியால், நோயால், சமூகத்தால், படும் துன்பங்களை இங்கே எழுதப்பட்டு இருக்கிறது. முதற்கவிதையாக வெளிச்சம் இதழில் ஏற்கனவே வெளிவந்த பிள்ளையாரை வேண்டுதல் என்னும் கவிதை இப்படி தொடர்கின்றது.

பிள்ளையாரே,
என்அம்மாவுக்கு
ரீச்சர் வேலை
கிடைக்கும் வரைபசி என் வயிற்றைத்
தீண்டா திருக்கட்டும்.

ஆசையோடு
சாக்கிற் போட்டுக்கட்டித் தூக்கிய
வாழைக்குலைக் குலை
பழுக்கும் வரைகுண்டுகள் வந்து
வீட்டுக் கூரை மேல்விழா திருக்கட்டும்.
வீட்டுப்பாடம்சரியாய்ச் செய்துர்
ச்சரிடம் நாளை
மிக நன்று
வாங்க வேண்டும்
கணக்குச் செய்யும் வரை
நிலவின்று மறையா திருக்கட்டும்.

அடுத்த வாரம்வெள்ளி
விழாக் காணும்
எமது பள்ளிக்கூடம்
இடம் பெயராதிருக்கட்டும்,
நாங்கள் பட்டதுன்பம்
இந்த பூமியில்எவருமே
இனிப்படா திருக்கட்டும்.

இந்த கவிதை ஒன்றே போதும் ஒரு பள்ளிச்சிறுமி படிக்க என்ன பாடுகின்றாள் என்பதை சொல்ல.. நடராசனின் ஆயிசா எப்படி பள்ளிச்சிறுமி ஒருத்தியின் மூலம் கல்வி முறைமையை சாடியதோ. அதே போல் கண்ணம்மா கல்வி கற்கும் சிறுமிற்கு வந்த இடைஞ்சலை சாடுகின்றது.

இரவில் அடுப்பு மூட்டுவதற்கே தீப்பெட்டி இல்லா நிலையிலே, விளக்கெரித்து படிக்க முடியமால் நிலவொளியில் அம்மாவின் மடியிலே படுத்தபடி டாக்டரும், இன்சினியராகும் கனவுடன் குழந்தைகள் தூங்கிப்போய் விடும் காலம் அது. தாய் அவர்கள் பசி என நித்திரையால் எழும்பி விடக்கூடாது என வேண்டுவாள்.

விழியிரண்டிருந்த போதும்
ஒளியிழந்த வீட்டுனுள்
கடிவாயைக் கண்டு கொள்ள முடியாது
அடுப்பை நன்றாய் ஊதுகின்றாள் தாய்.
அடுத்தடுத்த வீடுகளிலும்
கட்டை மூட்டுவதுதான் வழக்கம்
அங்கிருந்தும் வெளிச்சம்பெறமுடியாது.

இரண்டு யானைத் தீப்பெட்டிகள்
இல்லாது போன போதும்
இருக்கின்ற தீப்பெட்டிகள்
யானை விலையைத் தமதாக்கி கொண்டதால்
தீக்கடை கோல் கண்டுபிடித்த
காலத்திற்கே திரும்பி விட்டநம் வாழ்வை எண்ணி
நொந்தவாறே அடுப்பை ஊதுகின்றாள்.

இந்த கவிதை எனக்கு இன்னும் ஒரு ஞாபகத்தை கொண்டு வருகின்றது. அப்போது எல்லாம் பாடசாலையின் காலை பிரார்த்தனை கூட்டத்தில் பல மாணவர்கள் மயங்கி விழுவது ஒரு சாதாரண நிகழ்வாகி இருந்தது. காலில் செருப்பு அணிந்து பாடசாலைக்கு வந்த மாணவர்கள் சிலரே. கழுத்துப்பட்டி(tie) அணிந்து வர சொல்லும் அந்த பாடசாலைகளின் கண்டிப்பு இந்த பட்டினிகளுக்கு முன் இல்லமால் போயிட்டு. வீட்டுப்பாடம் செய்வதற்கு அவர்களுக்கு கைவிளக்கு கூட இல்லாது போயிட்டு. அல்லது கைவிளக்கு காற்றில் அணைவதை தடுப்பதற்கு அவர்களுக்கு ஏதுவும் இல்லாது போனது. புகையிரதம் ,விமானம் என்பதைதான் அவர்கள் படங்களில் பார்க்க வேண்டியிருந்தாலும்.. வெளிச்சம், உணவு என்பதை கூட அவர்கள் அப்படித்தான் பார்க்க வேண்டி வருமோ என்னும் நிலைமை உருவானது.

அம்மா காலை வீட்டிலே
ஆக்கித் தந்தா பாற்சோறு
அள்ளி அள்ளிச் சாப்பிட
ஆகா ஆகா நல்ல ருசி

என்ற பாடலை மட்டும்தான் அவர்களால் பாட முடிந்திருந்தது. பாற்சோறை பார்க்க முடியாமலே இருந்தது.

தி. உதயசூரியன் இந்த கண்ணம்மா மூலம் ,தான் ஆசிரியராக பணிபுரிந்த பொழுதுகளின் வேதனையை வடித்திருக்கிறார். ஒரு வகையில் அது காலத்தின் பதிவு. எனவே அதை யாரும் கவிதையோ..கட்டுரையோ வேற என்ன இழவுப் பெயரோ சொல்லி அழைக்கலாம். நான் பிறகு அந்த கவிதைகளை பதிவேற்றுகிறேன். படித்து விட்டு சொல்லுங்கள். அதில் உயிர் இருக்கிறதா இல்லையா என்று.