Tuesday, September 26, 2006

தவறவிடப்பட்ட சையசைப்பு


வீதியெங்கும் அலைந்து திரியும்
நிழலுருக்களில்
நீயும் இருப்பதாய்
தோன்றுகின்றதெனக்கு,

உன்
அழுத்தமான
முத்தத்தின் ஈரம்
இன்னமும் காய்ந்திருக்காது
உன் மருமகளின் கன்னங்களில்.
நீ
மூச்சு முட்ட முட்ட
இறுக்கி அணைக்கும் ஈர ஸ்பரிசம்
அவளுக்கினிமேல்
எப்போதுமிருக்காது.....

அக்காவின் விறைத்த கைகள்
பெற்ற மடமடத்த யூரோத்தாள்களின்
இசைக்கருவியை இசைக்கவும்
இனியாரும் கிடையாது

உன்
கல்லறை தடவுகையில்
நாதமெழுவதாய்
கனவிலிருக்கிறது
காற்று,.....


தன்னை எடுத்து பிசைந்து
மெட்டமைக்கும் கனவுக்கு
ஆளில்லை என நாதியற்று கிடக்கிறது.

நேற்றைய பொழுதில் தவறவிடப்பட்ட
உன் கையசைப்பை
நினைத்தபடியே
வீதியோரம் நிற்கின்றேன்.
இனி எந்த கையசைப்பையும் தவற
விடுவதில்லையென
கைகளை உயர உயர தூக்கி
அசைத்த படியே....


சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளரான எனது நண்பன் யுத்தக்களமொன்றில் இறந்த பின் எழுதியது...

நிலவன்

Monday, September 18, 2006

வழக்கொன்றின் முடிவு


காலம் கனிகிறது
தூக்கு கயிறுகளும்
துண்டாடும் கோடாரியும்
கல்லறைகளும் தயாராக
காலம் கனிகிறது


தீர்ப்புக்காய் காத்திருந்த
வழக்குகள் வருகின்றன.
நாறும் புழுக்கடைந்த பிணங்களும்
சாட்சிகளாய் வர
காலம் கனிகின்றது

இருளோடு குமட்டும் மணமெடுத்து
பட்டமரம் தன்னில் குடிக்கும்
இரத்தம் குடியிருக்கும் வெளவால்களும்
வெள்ளைச்சேலை ராணியின்
பச்சைமுக ஏவல்பேய்களும்
ஒழிக

நெரியுண்டு புதையுண்டு
எரிந்தழிந்து போனதெல்லாம்
மறுபடியும் விளைந்தெழுக
என்றது தீர்ப்பு.

நீதி தேவர்கள்
வழங்கிய தீர்ப்பின்
வரிகளால் இருளுண்ட நகரம்
வெளிப்படைகின்றது

இருளடைந்த நகரில் வெள்ளரசு
மரத்தில் குடியிருக்கும்
கோலியாத்தின் நண்பர்களே
உங்களுக்காய் தூக்குகயிறுகளும்
தூண்டாடும் கோடாரியும்
கல்லறைகளும் தயாராகின்றது.

வெளிச்சம் கலை இலக்கியம் இதழ் 2000